திருவாரூர், செப். 18 –
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க திருவாரூர் மாவட்ட அளவிலான தேர்தல் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வேல்முருகன், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மொத்தம் வாக்களிக்க தகுதிப்பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 146 வாக்குகளாகும், இந்நிலையில் இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 134 வாக்குகளாகும். அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் திருவாரூர் மாவட்ட அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வன்னியநாதன் உட்பட அவரது அணியினர் மாபெரும் வெற்றி பெற்றனர்.
அதனை தொடர்ந்து வெற்றிச் சான்றிதழை மாநில தேர்தல் ஆணையர் வெற்றி பெற்ற வன்னியநாதன் அணியினருக்கு வழங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினார்கள்.






















