திருவாரூர், செப். 17 –
தமிழக மக்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாளாக சிறப்பாக கொண்டாடினர்.
மேலும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து திராவிடர் கழக மாவட்ட தலைவர் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.
முன்னதாக திருவாரூர் நகராட்சி சார்பில் என் குப்பை என் உரிமை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





















