இராசிபுரம், ஜூன். 29 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மல்லாங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன், 42. தறித் தொழிலாளி. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பே பலர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கில் வீடு கட்ட கணேஷன் கடைக்கால் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு வெண்ணந்தூர் பேரூராட்சி நிர்வாகம் நத்தம் புறம்போக்கில் வீடு கட்டக் கூடாது எனக் கூறி வேலி அமைத்து வருகின்றனர்.
நத்தம் புறம்போக்கில் ஏற்கனவே பலரும் வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் எனக்கு மட்டும் பேரூராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறி வெண்ணந்தூர் சந்தை அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு கணேஷேன் முயன்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் சில மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் கணேசனை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


















