காஞ்சிபுரம், ஜூன். 16 –
உத்திர பிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்த இந்தோ – திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடல் காஞ்சிபுரத்தில் இன்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து தூப்பாக்கி குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வடிவேல்நகர் விரிவாக்கப் பகுதி குமாரசாமி நகரை சேர்ந்தவர் அப்பாண்டை ராஜ். இவரது மகன் ரமேஷ்(58), உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலி முகாமில் இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பணியில் இருந்த இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து ரமேஷின் உடல் ராணுவத்தினரால் பெரேலி முகாமிலிருந்து கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எதிர்பாராத விதமாக உயிரிழந்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் ரமேஷ் உடலுக்கு உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆகியோரும், காவல்துறை, சார்பிலும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் சடங்குகள் முடிந்த பின்னர் காஞ்சிபுரம் தாயார்அம்மன் குளம் இடுகாட்டில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மரியாதை செலுத்த 6 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் ரமேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.























