கும்பகோணம், ஆக. 05 –
கும்பகோணத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆலயத்தின் ஆடி மாத திருநடன உற்சவம் நடைப்பெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டு களித்தும், காளியம்மனிடம் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டனர்.
கும்பகோணத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான இலுப்பையடி தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயம் அவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் காப்பு கட்டி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இவ்வாண்டு இவ்விழா கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஞாயிறன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இவ் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ காயத்திரி காளியம்மன் திருநடன திருவீதியுலா இன்று நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக ஏராளமான பெண்கள் தாய் வீட்டு சீதனமாக தேங்காய், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் கொண்ட வரிசை தட்டுக்கள் சகிதமாக ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த காயத்திரி காளியம்மனை கோயில் சன்னதி முன்பு சுற்றிலும் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு புறமும் சூழ்ந்து நின்று பூமாரி பொழிந்தும், மலர் மாலைகள் அணிவித்தும், காளியம்மனை உற்சாகமாக வரவேற்க, லட்சுமி விலாஸ் தெரு, உப்புக்காரத்தெரு, ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு என நான்கு வீதி சந்திப்பில், திருநடனம் புரிந்தார், அப்போது, திருநடனம் புரிந்து வீதியுலாவாக வந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தும், அவரிடம் பிராத்தனைகள் முறையிட்டும் வழிபட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை காயத்திரி ஜபம், மூலமந்திர ஜபமும், அதனை தொடர்ந்து பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு ஸ்ரீ காயத்திரி ஹோமமும் நடைபெறுகிறது இவ்விழாவின் சிறப்பம்சம் ஆகும்.




















