கும்பகோணம், மே. 24 –
வங்கி எழுத்தர் பணிக்கு, தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏரளமானோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
ஒன்றிய அரசு, பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கு, தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இதனை கண்டித்தும், இம்முடிவை திரும்ப பெறவும் மாநிலம் தழுவிய அளவில் இன்று திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நிம்மதி, உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.





















