அம்பத்தூர், மார்ச். 19 –
சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் அம்பத்தூரில் உள்ள கள்ளிக்குப்பம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டினுள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் விற்பனைக்காக சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த வீட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த ஐந்து பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த நவீன் (எ) சியாம் சுந்தர் (22), திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த நண்பர்களான வீரா (எ) வீரப்பன் (26), அஜய் (20) மற்றும் கள்ளிகுப்பத்தை சேர்ந்த ஸ்ரீதர் (28) மற்றும் கோகுல் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் அரக்கோணத்தை பூர்வீகமாகக் கொண்ட நவீன் (எ) சியாம் சுந்தர் மீது அரக்கோணத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்ட விசாரணையில் இவர் கடந்த ஒரு மாதங்களாக கள்ளிகுப்பம் சோதனை சாவடி அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை சிறிய பொட்டலமாக மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் விற்றது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


















