கும்பகோணம், பிப். 14 –
கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம் பாட்டாளி மக்கள் கட்சி சுயேச்சைகள் உள்பட 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். மாநகராட்சி உட்பட்ட 15வது வார்டில், மக்கள் நீதி மையம் சார்பில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ரஷிதா மேட்டு தெரு வன்னாங்கண்ணி பகுதியில் வாக்கு கேட்க சென்ற போது அப்பகுதி உள்ள பொதுமக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வாக்கு கேட்க சென்ற வேட்பாளர் ரஷிதா குங்குமம் வெத்தலை பாக்கு கொடுத்து பெரியவர்களுடன் காலில் விழுந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


















