கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம், பிப். 9 –
கும்பகோணத்தில் 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பத்து நாட்களுக்கு ஒருசேர நடைபெறும் பிரசித்தி பெற்ற மாசிமக பெருவிழா ஆறு சைவத்திருத்தலங்களில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்குகியது,
இதன் தொடக்கமாக மகாமகக்குள வடகரையில், அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கொடிமரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் நந்திபெருமான் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுவாமிகளுக்கும் கொடி மரத்திற்கும் கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர் மற்றும் அபிமுகேஸ்வரர் என மேலும் ஐந்து சைவத் திருத்தலங்களிலும் இன்று முற்பகல் கொடியேற்றம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் நாளான 17ம் தேதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் 12 சைவத்தலங்களில் இருந்து உற்சவ சுவாமிகள் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள, மாசி மக தீர்த்தவாரி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.