கும்பகோணம், டிச. 26 –
கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற அருமொழி விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கிருபாகரன் இராமநாதபுரத்தில் உள்ள தமிழின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய ஆங்கில அறிஞர் ஒயிட் கெல்லீஸ் கல்லறையை அரசு புதுப்பிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டை அருகே ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் அருமொழி விருது வழங்கும் விழா சோழர் வரலாற்று ஆய்வு சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் கலந்துக் கொண்டு கல்வெட்டு, வரலாறு தொடர்பான 36 பேருக்கு விருதுகளை வழங்கி பேசினார். தமிழகத்தின் தொன்மையான இடங்களை வெளி கொண்டு வருவதற்கும், தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கவும் இது போன்ற அமைப்புகளின் பாராட்டு, போற்றுதலக்குரியது. எனவும், தமிழகத்தில் பல்வேறு அகழ்வராய்ச்சிகள் நடைபெற்று தமிழின் பெருமைகள் ஒவ்வொன்றாக அறியப்பட்டு வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சிகளை தடுக்க பல தடைகள் வந்தது. ஆனாலும் நீதிமன்றம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு . தமிழின் பெருமை குறித்து அகழ்வராய்ச்சி முழுமையாக நடத்திட வேண்டும். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். அவர்களை நாம் உயர்த்திப் பிடித்தால்தான் தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்க முடியும். இங்கு தமிழ் இளம் ஆராய்ச்சியாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் நாம் செய்ய வேண்டியது நம் குழந்தைகளுக்கு தமிழை ஒரு மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். முதல் மொழியாக ஆங்கிலம் இருந்தாலும் தமிழை 2-வது மொழியாகவது அவசியம் பயிற்றுவிக்க வேண்டும். ஆங்கிலம் என்பது அறிவியல் மொழி. உலக மொழி. ஆனால் தமிழ் மொழி நம் உயிர் மொழி.எனவே 2-வது மொழியாகவது தமிழை குழந்தைகளுக்கு பயிற்றுவித்து, 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த நம் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு செலவிடுவதை போல தமிழ் மொழிக்கும் மத்திய அரசு அதிகம் செலவிட வேண்டும். கிழக்கிந்திய ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வந்து பின்னர் சென்னையில் ஆட்சியாளராக பணி பரிந்து வந்த ஒயிட் கெல்லீஸ் என்ற ஆங்கில அறிஞர்தான் தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றியவர். அவர் திருக்குறளை தமிழ் மொழியில் மொழி பெயர்த்தார். திருவள்ளுவருக்கு தங்கத்தில் நாணயம் வெளியிட்டார். மறைந்த இவரது கல்லறை ராமநாதபுரத்தில் உள்ளது. இந்த கல்லறையை அரசு புதுப்பிக்க வேண்டும். அவர் பெயரில் தபால் தலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் ராஜாராம் கோமகன், இந்திய தொல்லியல் துறை திருச்சி கோட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், தஞ்சை துணை வட்ட பராமரிப்பு உதவியாளர் சங்கர், ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரி தாளாளர் மதனகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வு சங்க துணைத்தலைவர் மாரிராஜன், செயற்குழு உறுப்பினர் ரூத் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முடிவில் ஆய்வு சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.





















