கும்பகோணம், டிச. 23 –
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஸ்ரீ கும்பமுனிசித்தர் எனும் அகஸ்திய பெருமான் சன்னதியில் மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று குருபூஜை, விசேஷ சித்தர் யாகம் மற்றும் ஆதிவிநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .
உலக பிரசித்தி பெற்ற வட இந்திய கும்பமேளாவிற்கு இணையானது கும்பகோணம் மாநகரில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமக பெருவிழா அப்பெரு விழாவிற்கான 12 முக்கிய திருக்கோயில்களில் ஒன்றான மங்களாம்பிகா சமேத அருள்மிகு ஆதி கும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் சித்த புருஷர்களில் உயர்ந்தவரும், 18 சித்தர்களில் முதன்மையானவரும், ஊழி காலத்தில் முதலில் தோன்றிய ஆதிகும்பேஸ்வரசுவாமியை பூஜித்த அகத்திய மாமுனி, கும்பமுனி சித்தராக தென்மேற்கு மூலையில் ஆதிவிநாயகர் சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்
ஒவ்வொரு மாதமும் அகஸ்தியர் எனும் கும்பமுனி சித்தரின் திருநட்சத்திரமான ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஆதிவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெற்று வந்தாலும், மார்கழி மாதம் வரும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆண்டு குருபூஜை செய்து நடைபெறுவது வழக்கம்.அதுபோல இவ்வாண்டும் அவரது ஜென்ம நட்சத்திர தினமான இன்று சுவாமிகளின் குருபூஜையினை முன்னிட்டு வேத மந்திரங்கள் ஒலிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் மற்றும் நந்தி வாத்தியங்கள் முழங்க, விசேஷ சித்தர் ஹோமமும் அதனை தொடர்ந்து திரவியப்பொடி, மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என பல்வேறு விதமான பொருட்களை கொண்டு ஆதிவிநாயகருக்கும் உற்சவர் கும்பமுனிக்கும் விசேஷ அபிஷேகமும் அதனையடுத்து சிறப்புமலர் அலங்காரத்தில் மகா தீபாராதனையும் நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது