சென்னை, டிச. 22 –
நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 01-30 டிசம்பர் 2021 வரை கடற்கரைகள் மற்றும் கடலோரப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான தூய்மைக் கடற்கரை இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணியின் போது மாணவர்கள், கடல் மற்றும் கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
மெட்ராஸ் குரூப் தலைமையிட (ஏ) தேசிய மாணவர் படையினர் 500 பேர், சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (21.12.2021) மகாத்மா காந்தி சிலை, கலங்கரை விளக்கம் மற்றும் ஐஎன்எஸ் அடையார் ஆகிய மூன்று இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த தூய்மைப் பணிக்கு பிறகு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இந்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் – செயலாளர் டாக்டர் ஆனந்த குமாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார். பொதுமக்கள் பங்கேற்று கையெழுத்திட ஏதுவாக, கையெழுத்துப் பலகை மெரினா கடற்கரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே வைக்கப்பட்டது. ஏராளமான முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படையினர் உள்ளிட்டோர் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.



















