கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆகாச மாரியம்மன் கோவில் பகுதியில் நாச்சியார் கோவில் காவல்துறையினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தபோது, அதில் இறந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை கோரைப்புற்களை போட்டு மறைத்து கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
மேலும் அது தொடர்பாக மினி வேனை ஓட்டி வந்த நாச்சியார் கோவில் அருகே துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்த நபரிடமும், உடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உயிரிழந்த மாட்டினை விலைக்கு வாங்கி கும்பகோணத்திற்கு கொண்டு சென்று, கறி துண்டுகளாக வெட்டி கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக அவர்கள் தெரிவித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளான காவல்துறையினர் நாச்சியார் கோவில் காவல்துறையினர் கும்பகோணம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வராமல் அலட்சியமாக இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தற்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மாட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து கும்பகோணத்தில் எந்தெந்த ஹோட்டல்களுக்கு உயிரிழந்த மாட்டின் கறி விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறையினரின் ஆய்விற்கு பிறகு உயிரிழந்த மாட்டை புதைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.