சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை- எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார். அதில் குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் உணவை ருசி பார்த்தார். பின்னர் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படுகிறது. பதிவு செய்து அடையாள அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும்.