பெரியப்பாளையம், ஜூன். 30 –

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தங்கத்தை வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த தங்கம் வகைப் படுத்தப்பட்டது. தொடர்ந்து 130 கிலோ 512 கிராம் தங்கத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

இத்தங்கம் மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் உருக்காலையில் சுத்தமான 24 கேரட் தங்கமாக உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த தங்கம் முதலீட்டு திட்டத்தின் மூலம் பவானி அம்மன் ஆலயத்திற்கு ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவில்களில் பெறப்பட்ட காணிக்கை தங்கங்களில் பயன் படுத்த முடியாத தங்கம் உருக்கி வங்கியில் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்து கிடைக்கும் பணம் கோவில் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தின் காணிக்கை தங்கம் முதலீடு திட்டத்தில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க உள்ளது எனவும், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்க்கிறது என்பதால் மக்களுக்கு பயன் தரும் இது போன்ற நல்ல திட்டத்தை கைவிட முடியாது என்றார்.

தங்கத்தேர் செய்யும் பணிகள் புகாருக்கு இடமளிக்காத வகையில் 18மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு தங்கர்தேர் பவனி நடைபெறும் என்றார். சிறுவாபுரி முருகன் திருக்கோவிலின் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கும்பாபிஷேகம் நவம்பர் மாதம் நடத்தப்படலாம் என தெரிவித்தார்.

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பணிகள் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரைவு திட்டம் முதலமைச்சர் ஒப்புதல் பெறப்பட்டு 3 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனை தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் , சட்டமன்ற உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி டிஜே கோவிந்தராஜன், பொன்னேரி தொகுதி துரை சந்திரசேகர்  மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here