சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி பிரதான சாலையில் இயங்கி வரும் 2 ஜவுளி கடைகளில் திருடு போன நிலையில், திருட்டில் ஈடுப்பட்ட நபரை 24மணி நேரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கைது செய்து அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர் கலிவரதன். இவர் பிடாரி தெற்கு தெருவில் உள்ள வஸ்திரா ஜவுளி கடை மற்றும் தேர் மேல வீதியில் உள்ள எவர்கிரீன் ஜவுளி கடை ஆகிய 2 கடைகள் வைத்து தனது சகோதரருடன் இணைந்து அதனை நடத்தி வருகிறார்.
இதனிடையே செவ்வாய்கிழமை இரவு பிடாரி தெற்கு தெருவில் வழக்கம்போல் கடையை பூட்டி சென்ற நிலையில், புதன்கிழமை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடை கல்லாவில் வைத்திருந்த பணம் திருட்டு போனது தெரிய வந்தது. அதேபோல் தேர் மேலவீதியில் உள்ள அவரது மற்றொரு கடையிலும் பணம் திருட்டுபோயிருந்தது. இச்சம்பவங்கள் குறித்து ஜவுளி கடையின் மேற்பார்வையாளர் கலிவரதன் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், தனிப்படை போலீஸôர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த முகமது பாகத் (25) என்பது தெரியவந்தது.
திருட்டில் ஈடுப்பட்ட நபர் திருட்டு நடந்த கடை ஒன்றில் பணியாற்றி சில மாதங்களுக்கு முன்னர் பணியிலிருந்து நின்றது தெரியவந்தது. முகமது பாகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.