திருவாரூர், ஏப். 18 –
நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அதன் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், என ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அந்நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
அதன் முதன் நிகழ்ச்சியாக திருவாரூர் நகராட்சியின் 23 வார்டு ஆறுமுகம் நகர் பகுதியில் வாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ. 9.06 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை ஓ.என்.ஜி.சி பொதுமேலாளர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி உறுப்பினர் வாரை பிரகாஷ் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் நமது பகுதிகளில் பல்வேறு சமுக பணிகளை செய்து வருகிறது என புகழாரம் சூட்டினார். மேலும், திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரவுள்ள இடங்களில் மின் விளக்கு அமைத்து தரவேண்டுமென அப்போது ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி துணை பொதுமேலாளர் பிரபாகரன், முதன்மை பொறியாளர் மாரி நலநாதன் சமூக பொறுப்புணர்வு திட்ட அலுவலர் விஜய்கண்ணன், ஒருங்கிணைப்பாளர் உதவி பொறியாளர் முருகானந்தம், நுகர்வோர் அமைப்பு ரமேஷ், ஆறுமுகம் நகர்வாசிகள் யோகிதா என்.ஜி.ஓ. ராமலிங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் அதுபோல் திருவாரூர் நகராட்சி ஆறாவது வார்டு பகுதியில் ஓ.என்.ஜி.சி. உதவியுடன் சுமார் ரூ 5.7 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் ஆறாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஐஸ்வர்யா பாஸ்கர், திருவாரூர் நகராட்சி நியமனக்குழு உறுப்பினரும், நகராட்சி உறுப்பினருமான வாரை பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தொடங்கி வைத்தார்
நிகழ்வுகளில் ஓ.என்.ஜி.சி முதன்மை பொறியாளர் மாரி நலநாதன் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், நகர் மன்ற உறுப்பினர் உமாமகேஷ்வரி சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் தொடர்ந்து திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஓ.என்.ஜி.சி சார்பில் சுமார் ரூ 5.5 இலட்சம் மதிப்புள்ள டேபிள், டெஸ்க் கணிணி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை ஓ.என்.ஜி சி பொதுமேலாளர் சரவணன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் தமிழ்ச்செம்மல் நகைச்சுவை நாவலர் சண்முகவடிவேல் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜனிடம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சமுக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி விஜய்கண்ணன், திருவாரூர் தமிழ் சங்க துணைத்தலைவர் சந்திரசேகரன், செயலாளர் அறிவு ஓ.என்.ஜி.சி முதன்மை பொறியாளர் மாரிநலநாதன், திட்ட ஒருங்ணைப்பாளர் முருகானந்தம் உதவி தலைமை ஆசிரியர் சதிஷ் பெற்றோர் ஆசிரியர் தலைவர் நிராஜ், கரம்சேர் அறம் செய் ராஜ்குமார் மற்றும் அமைப்பினர் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.