உத்திரமேரூர், ஜன. 14 –
உத்திரமேரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில், சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாள் விழாவினை, தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி சத்தியவிதானந்தா தலைமை தாங்கினார். அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜீவி, வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் விவேகானந்தர் கூறியது போல் இன்றைய இளைஞர்கள் அனைவரும் தங்களது திறன்களை வெளிக் கொண்டு வந்து அனைத்து துறைகளிலும் சாதித்து சிறந்து விளங்கி வாழ்க்கையில் மேன்மேலும் வளர்ச்சியடைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விவேகானந்தரின் போதனைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியானது பள்ளி வளாகத்தில் துவங்கி கேத்தாரீஸ்வரர் கோவில் தெரு, பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விவேகானந்தரின் போதனைகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனத் திரளானவர்கள் பங்கேற்று இந் நிகழ்வினை சிறப்பித்தனர்.