திருவள்ளூர், ஜூன். 07 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டுப்பள்ளி காளாஞ்சி பகுதியில் வசித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து உண்மை தன்மை அறியும் பூவுலக நண்பர்கள் குழு கோ.சுந்தர்ராஜன், தலைமையில் மூத்த பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், சமூக செயல்பாட்டாளர்கள் கா.சரவணன் மற்றும் நித்தியானந்த ஜெயராமன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காட்டுப்பள்ளி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பின் தன்மைக். குறித்தும். ஆய்வு மேற்கொண்டனர். பின்பு அக்குழுவினர் கூறியதாவது அரசும், எல்&டி, அதானி துறைமுகம் காட்டுப்பள்ளி காளாஞ்சி பகுதி 140 மீனவ குடும்பங்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படவில்லை எனவும், நாளடைவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இயற்கை வளங்கள் அழிந்து வருவதாகவும், மேலும் காட்டுப்பள்ளி குப்பம் மீனவர்கள் நல்ல ஆரோக்கியம், செழிப்பு என்ற வாழ்வில் இருந்து வறுமை, பட்டினிக்கு நகர்ந்துள்ளதையும் குறிப்பிட்டனர். மேலும், பணி நிரந்தரம் வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேறினார்கள். ஆனால் அது நிறைவேற்றப்படாததால் 140 மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தவித்து வருவதாகவும் தெரிவித்தனர்
2009ம் ஆண்டு காட்டுப்பள்ளி மீனவ மக்கள் வசித்த பழைய கிராமப்புற பகுதியையும் அவர்கள் செய்து வந்த மீன்பிடி தொழில் குறித்தும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதில் அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருப்பதாக தெரிவித்தனர். மீன் பிடி தொழிலை செய்வதற்கு போதுமான இடவசதி இல்லாமலும் இருந்த கரைகளும் கடல் நீரில் அழிக்கப்பட்டு தவித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் அளித்த பல்வேறு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதில் முக்கியமானது தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளார்.
அதேப் போன்று 2009 – ல் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு நிலம் வழங்கிய 140 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் வேலை வாய்ப்பு தரப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் 2009 இல் இருந்து 2012 வரை கட்டுமான பணிகள் நடைபெற்ற போது தற்காலிகமாக 140 பேருக்கு கட்டுமான பணிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருவருக்கு கூட நிரந்தர வேலை வழங்கப் படவில்லை. 140 குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு போகாமல் போராடி வருகின்றனர்.
தற்போது நாங்கள் இந்த பகுதியில் ஆய்வு செய்யும் போது இந்த துறைமுகம் அமைக்கப்பட்ட பிறகு எந்த அளவு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் அவருடைய வாழ்வாதாரம் எந்தளவுப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்தோம் எனவே தமிழக முதல்வர், அவர்களுக்கு உண்டான நிரந்தர வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.





















