கும்பகோணம், அக் 10 –
கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் இந்து தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் மூன்று திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் கலந்து கொண்டார்.
108 வைணவ தலங்களில் மிகவும் சிறப்புடைய தலமாக விளங்கும் கும்பகோணம் அருகேயுள்ள திருவிண்ணகர் என போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலை போற்றி பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர்.
மேலும், திருப்பதி வேங்கடாஜலபதி சுவாமியை போன்றே இத்தலத்து இறைவனும் வரப்பிரசாதியாக வெங்கடாசலபதி என்ற பெயருடனும் புராணங்களில் ஸ்ரீனிவாசன் எனும் திருநாமம் கொண்டும் விளங்குகிறார். தாயார் பூமிநாச்சியார் மற்றும் மூலவரான பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இத்திருக்கோயிலில் உள்ளார்.
மேலும், மார்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் உள்ளார். இங்கு பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. திருப்பதிக்கு மூத்தவராக இத்தல இறைவன் விளங்குவதால் திருப்பதி பெருமாளுக்கு செலுத்தப்பட வேண்டிய பிரார்த்தனைகளை அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கே செலுத்தினாலும் முழு பலன் உண்டு என இத்திருத்தல வரலாறு கூறுகிறது. தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது மேலும் பெருமைக்குரிய ஒன்றாகும்
இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இந்து தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் திருக்குடை உபய உற்சவ ஊர்வலம், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோவில் நான்கு வீதியில் ஊர்வலமாக வந்து உப்பிலியப்பன் கோவில் துணை ஆணையர் உமாதேவிடம் மூன்று திருக்குடையை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகர செயலாளர் ராம ராமநாதன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சதீஷ்குமார், வழக்கறிஞர் அணி மேற்பார்வையாளர் வழக்கறிஞர் சுரேஷ், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் வேதாஜி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி, நகர செயலாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கோவில் கண்காணிப்பாளர்கள் ஊழியர்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.