திருவாரூர், மார்ச். 30 –
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. திருவாரூரில் பிறந்தாலும் முக்தி தரும் திருத்தலம் திருவாரூர் அருள்மிகு தியாகராச்சுவாமி திருத்தலமாகும். இத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றானதும் சைவ திருத்தலங்களில் முதன்மையானதும் மேலும் உலகப் பிரசித்தி பெற்றதுமாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் திருத்தேரோட்டத்திற்கு வெளிநாடு வெளி மாநில மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இந்தத் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய திருத்தேராகும்.
மேலும் இத்திருத்தேர் 96 உயரமும், 300 டன் எடையும் கொண்டதாகும். மேலும் இத்திருத்தேரின் வடம் பிடித்திழுக்க முண்டியடித்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஆரூரா தியாகேசா என்று அவர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை பிளக்கும் வதமாக அப்போதிருக்கும்.
அச்சிறப்பு மிக்கதும், பிரசித்திப் பெற்றதுமான திருவாரூர் திருத்தேரோட்டம் நாளை இந்நகரில் நடைப்பெறுவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் இந்து அறநிலைத்துறையும் சிறப்புக் கவனம் செலுத்தி மிகச் சிறப்பாக செய்து வருகிறது. மேலும் நாளை நடைப்பெறயிருக்கும் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவுள்ளது.