கும்பகோணம், ஜன. 17 –
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் காவலர் குடியிருப்பு காலனியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர் குடியிருப்பு காலனியில், சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவனது வருட வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருவதாகவும் இதில் மதச் சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என அனைத்து மதத்தையும் சார்ந்தவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தொடர்ந்து கொண்டாடப் பட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள். மேலும், தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையைக்கண்டு பயப்படாமல் காய்கறி, பழங்கள் போன்ற சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தெரிவித்தார். சமத்துவ பொங்கலைத் தொடர்ந்து, உழவுக்கு உற்ற தோழனாயிருக்கும் காளை பூட்டிய மாட்டு வண்டியை பெருமைப் படுத்தும் வகையில், காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் கடை வீதியிலிருந்து இரட்டை மாட்டு வண்டியை குடியிருப்பு பகுதி வரை ஓட்டி சென்றார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து காவல்துறை குடும்பங்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.