மயிலாடுதுறை, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
சீர்காழி அருகே செம்மங்குடியில் மூன்று நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அவ்வூர் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்துகளில் இருந்து கீழே இறங்கி பயணிகள் நடந்து சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அம்பேத்கார் நகர், பூமி திடல், வில்வராயன் நத்தம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், அப்பிரச்சினைக் குறித்து ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை எடுத்துக்கூறியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சீர்காழி-திருமுல்லவாசல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சீர்காழி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் இன்று மாலை 4 மணிக்குள் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தார்.
மேலும் கூடுதலாக அடி பம்புகள் அமைத்து தரவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அவரின் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்ட அவ்வூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தற்காலிகமாக அமைதியாக கலைந்துச் சென்றனர்.
அச்சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி திருமுல்லைவாசல் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் இருபுறமும் நடந்து சென்றனர்.