கும்பகோணம், ஜன. 14 –
108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக கும்பகோணத்தில் 3 வது தலமாகமாக உள்ளதும், பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதுமான, அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா எனும், சங்கரமண பிரமோற்சவ விழாவின் 9 ஆம் நாளான இன்று, தைப்பொங்கல் நன்னாளில், உற்சவர் அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருள இத்தேரோட்ட திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலையில் நடைபெற்ற இத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வளம் வந்தனர்.
மேலும், அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சங்கரமண பிரமோற்சவம் (எ) தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா கடந்த 07 ஆம் தேதி திங்கட்கிழமை இத்திருக்கோயிலில் உள் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலும் அதனைத்தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைப்பெற்று வந்தது. மேலும், அந்நிகழ்வின் முக்கிய விழாவாக 9ஆம் நாளான இன்று தைப்பொங்கலை முன்னிட்டு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேதராய் தேரில் எழுந்தருள, தைப்பொங்கல் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையே ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாரங்கா சாரங்கா என்று தேரை இழுத்து வந்தனர்.






















