தஞ்சாவூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
குரு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் குருபரிகார ஸ்தலமாக திகழும் திட்டை அருள்மிகு. வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் அத்திருக்கோயிலில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக விரிவான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது.
குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அத்தகைய சிறப்புமிக்க குருபகவான் நாளை (01) ம் தேதி மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவில் குருபரிகார ஸ்தலத்தில் குருபகவான் தனி சன்னதியில் தெற்கு திசை நோக்கி ராஜகுருவாக அருள்பாலித்து வருகிறார்.
மேலும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அதன் காரணமாக பக்தர்கள் வருகையை ஒட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நான்கு சக்கர வாகனங்கள். இரு சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தனி தனி வழிகள் செய்யப்பட்டுள்ளன. நாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று முதல் ரிஷபம். மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய பரிகார ராசிக்காரர்கள் அர்ச்சனை செய்து செல்கின்றனர்.