நன்னிலம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் கோவில் அருகில் உள்ள மின் மாற்றியில் ஆண் மயில் ஒன்றி சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த அம் மயிலின் உடலை பொதுமக்கள் ஒன்றிணைந்து நல்லடக்கம் செய்தனர்.
தென்னைகள் அதிகம் நிறைந்த பசுமையான பகுதியாக விளங்கும் நன்னிலத்தில், மிகச் சக்தி வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் அக்கோயிலின் அருகே தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் வந்து தனது அழகிய தோகையை விரித்து ஆடும் காட்சிக் காண அப்பகுதி மட்டுமல்லாது சுற்றுப்புற பொதுமக்களும் வந்து ஆர்வத்துடன் கண்டுகளிப்பார்கள்
இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் மாரியம்மன் கோயில் அருகே மயில்கள் ஒன்றோடு ஒன்று விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, ஆண் மயில் ஒன்று எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின் மாற்றியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து கீழே விழுந்தது.
அதனைக்கண்ட பொதுமக்கள் மிகவும் சோகமடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தப் பின்பு, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அம் மயிலின் உடலை நல் அடக்கம் செய்தனர்.