கும்பகோணம், ஜூன். 22 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை முதன்மை சாலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மூன்றுமுகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலையை சிலர் திடீரென அரசு அனுமதியின்றி அமைத்துள்ளனர்.
இப்பிரச்சினைக் குறித்து திருவிடைமருதூர் வட்டாட்சியா் சுசிலா மற்றும் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா ஆகியோரிடம் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் திடீரென அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அச் சாமி சிலையை அகற்றக் கோரியும் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவருகிறது.
இதனைத்தொடா்ந்து, பந்தநல்லூா் காவல் நிலைய காவலர்கள் துணையுடன், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் மூன்று முகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலையை அப்புறப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு சென்றனா். மேலும் தொடர்ந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஆஞ்சனேயா் சிலைக்கு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையை அவர்கள் அகற்றினார்கள்.
இந்நிலையில் அங்கு வந்த சில பெண்கள் சிலையை எடுக்க வேண்டாம் என அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும், 10 நாட்கள் தங்களுக்கு அவகாசம் கொடுத்தால் தாங்களை அச் சாமி சிலையை அகற்றிக் கொள்வதாக அரசு அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, சிலையை அகற்றும் பணியை அலுவலா்கள் தற்காலிகமாக கைவிட்டும், பத்து தினங்கள் அவர்களுக்கு காலக்கெடு அளித்தும் அங்கிருந்து சென்றனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.