காஞ்சிபுரம், மார்ச். 19 –
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை மூடி பல வருடங்களாக ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா எனும் ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகரிடமிருந்து ரூ. 10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து மீட்டனர்.
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழை காலங்களில், பெரும் சேதம் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதின் பேரில் அனைத்து நீர் நிலைகளையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை உள்ளிட்ட அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து அதனை மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து நீர்நிலைகள் மற்றும் அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிட்டியம்பாக்கம் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் புறம்போக்கு வகைப்பாட்டைச் சேர்ந்த அரசுக்கு சொந்தமான தாதான் குளத்தை திமுக பிரமுகர் ஜெய்சங்கர் என்பவர்
ஆக்கிரமிப்பு செய்து குளத்தின் ஒரு பகுதியை மூடி பல ஆண்டுகளாக பஞ்சாபி தாபா என்ற ஹோட்டலை நடத்தி வந்துள்ளதை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய் துறையினர் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தப்போது குளம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து இன்றைய தினம்
குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பஞ்சாபி ஹோட்டலை அகற்றும் பணிகள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
மேலும் அங்கு நடைபெற்று வரும் அரசு நிலம் மீட்பு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இன்றைய தினம் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ள அரசு நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என வருவாய்த்துறையினர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா ஹோட்டல் நடத்திய திமுக பிரமுகர் ஜெய் சங்கரின் தம்பி தேவேந்திரன் என்பவர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம் ,உத்திரமேரூர் , காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்களை வருவாய்த்துறையினர் மீட்டு உள்ளனர்



























