கும்பகோணம், ஜூலை. 02 –

கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்துறை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து நெகிழி பொருட்கள் உபயோகித்த கடைகளுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ரயில் நிலையம் அருகில் உள்ள பீடா கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இத்தகவல் கிடைத்த உடனே உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சசிக்குமார் முத்தையன் ஆகியோர் கடை ஆய்வு செய்த போது கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து, பீடா கடையை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து அருகிலுள்ள  ஓட்டல்களில் ஆய்வு நடத்தினர். பின்னர் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அங்கிருந்த கெட்டுப்போன உணவை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை உபயோகப்படுத்தி உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்டனர் ஓட்டல்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 4 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here