திருநின்றவூர், மார்ச். 05 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் நாட்டு நலப்பணி குழு சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பேரணியை ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன் துவக்கி வைத்தார்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் பகுதியில் ஸ்ரீராம் கலை கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் நாட்டு நலப்பணி குழுவினருடன் இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். இதனை ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணி திருநின்றவூர் மார்கெட் அருகேவுள்ள காந்தி சிலையில் ஆரம்பித்து லட்சுமி திரையரங்கம் வழியாக நத்தமேடு, பாலவேடு பகுதியாக பாக்கம் கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு மாணவ மாணவிகளும் விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக செல்ல வேண்டும். என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றனர்.
இப்பேரணிக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையில் திருநின்றவூர் காவல் நிலைய போலீசாரும், ஆவடி போக்குவரத்து காவல் துறை காவலர்களும் உடன் சென்றனர்.