இராசிபுரம், ஏப். 09 –
ராசிபுரத்தில் இரண்டு நாள் நடக்கும், தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், 5 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில், இந்திய ஊரக விளையாட்டு வாரிய கோப்பைக்கான தேசிய அளவிலான போட்டி 9, 10ம் தேதி என இரண்டு நாள் நடக்கிறது. இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்தியன், ரீகர்வ், காம்பவுண்ட் என மூன்று பிரிவுகளில் நடக்கும் போட்டியில், 10, 14, 17, 19 மற்றும் சீனியர் ஆகிய வயதுப்பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட ஊரக விளையாட்டு சங்க தலைவர் R.T.இளங்கோ போட்டியைத் துவக்கி வைத்தார். இந்திய ஊரக விளையாட்டு சங்கத்தின் துணை செயலாளர் பாலமுருகன், பொது செயலாளர் கேசவன், தலைவர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.