கும்பகோணம், டிச. 18 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் பால் குடம் ஏந்தி வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டதல்களை நிறைவேற்றினார்கள்.
கும்பகோணம் மாநகரில் ஆண்டு தோறும் மார்கழி மாத துவக்கத்தையொட்டி, அம்மாநகரின் பெசண்ட் சாலையில் உள்ள உச்சினிமா காளியம்மன், எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஈசான்ய எல்லையம்மன், காசிராமன் தெருவில் உள்ள சுந்தரமா காளியம்மன் ஆகிய மூன்று அம்மன் கோயில்களும் இணைந்து ஏகதின ஆண்டு உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இவ்வுற்சவத்தினை முன்னிட்டு, காவிரியாற்றின் பகவத்படித்துறையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சுந்தரமகா காளியம்மன், மற்றும் உச்சினிமா காளியம்மன் ஆகியவற்றின் திருநடனத்துடன், வேல்கள் சுமந்தும், ஏராளமான பெண்கள் பால்குடங்கள் ஏந்தியும் திருக்கோயில்களுக்கு வந்து பாலாபிஷேகம் செய்து தங்களது பிராத்தனைகளை நிறைவு செய்து சுவாமிகளை தரிசனம் செய்தனர் இவ்வுற்சவத்தில் பங்கேற்ற பெரும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.