போரூர், ஏப். 01 –
திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை இராமாபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 2770 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம் கணபதி தலைமையேற்று நடத்தினார். மேலும் இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவியாக தையல் எந்திரம், சலவைப் பெட்டி, குக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதற்காக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அந்தந்த வட்டச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.
அதனைத்தொடர்ந்து இக்கூட்டத்திற்கு ஏறக்குறைய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மேலும் சிறப்பு விருந்தினர்கள் உரைநிகழ்த்தி முடிந்தப்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அந்நேரத்தில் 2500க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்ட குக்கரை வாங்க முண்டி அடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. அதனைத்தொடர்ந்து, அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் பவுன்சர்கள் அவர்கள் அனைவரையும் தடுத்து கட்டுப் படுத்தினார்கள்.
இருப்பினும் குக்கர் தீர்ந்திடுமே என்ற எண்ணத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு முண்டியடித்தனர். இதில் மூதாட்டி ஒருவருக்கு திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டது.
அப்போது அருகே இருந்த காவல்துறையினர் அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி வழங்கி அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். முறையான திட்டமிடல் இல்லாமல், ஒரே நேரத்தில் 2720 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.