தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே பொன்னேர் உழுதலின் நோக்கம். சித்திரை மாதம் முதல் நாளில் விவசாயிகள் மாடுகளை நீராட்டி சந்தனம், பொட்டு வைத்து, வயலில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரிய நாராயண பூஜை ஆகியவை நடத்தப்பட்டது.
அப்போது உழவு செய்ய வேண்டிய இடத்தில் இயற்கையான உரங்களை தெளித்தும், நவதானியங்களை தூவியும், பின்னர் ஏர்க் கலப்பையில் மாட்டைப் பூட்டி விவசாயிகள் உழவு செய்தனர். நல்லேர் எனும் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
அதன் மூலம் அந்த ஆண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு சங்கர மடத்தின் சார்பில் விவசாயிகள் அனைவருக்கும் காணிக்கைப் பணம், பழம், தேங்காய், வெற்றிலை, சர்க்கரை கலந்த பச்சரிசி வழங்கப்பட்டது.
மேலும் பாரம்பரிய முறைப்படி கைப்பிடி விதை நெல் வழங்கப்பட்டது. விவசாயிகள் அதனை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், 20 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் ஏர் பூட்டப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






















