பொன்னேரி, ஆக. 02 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக அவ்வாற்றிற்கு மழை நீர் அதிகமாக வரத்தொடங்கி, ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்து, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து, பொருள் மற்றும் பயிற் சேதம் என பெரும் சேதத்தை அப்போது ஏற்படுத்தியது.
இந்நிலையில், அச்சேதாரத்தின் மதிப்பினை அளவீடு செய்வதற்காகவும், மேலும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டவாறு எதிர் வரும் மழைக்காலங்களில் அதுப்போன்ற சேத த்தை தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இன்று அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொன்னேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அக்குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இவ்வாயிவின் போது உடனிருந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினருடன் கடந்த கால பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ள பாதிப்புகளை கடந்த காலங்களில் கையாண்ட விதம் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அப்போது கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமாண்டர் தாழ்வான இடங்கள், பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு வருவதாகவும், மேலும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகையும் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மனோகரன், வருவாய்துறை அதிகாரி தேவராஜ், வி.ஏ.ஓ. மற்றும் தேவராஜ் ,கணபதி, உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.