மதுரவாயல், ஏப். 04 –
மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் 155 வது வார்டு திருமலை நகர் பகுதியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக சுமார் 444 வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை காலி செய்து தர வேண்டுமென வீடுகளில் நோட்டீஸ் ஓட்டி சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி வாசிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரணியாக வந்து ராமாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு வீடுகளே அகற்றக்கூடாது எனக்கூறி கிராம நிர்வாக அலுவலர் சரவணனை நேரில் சந்தித்து மனுக்களை வழங்கினார்கள்.
இதில் வட்ட கவுன்சிலர் ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.