கும்பகோணம், பிப். 24 –
கும்பகோணம் அடுத்துள்ள திருநறையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சனி பகவான் உஷா தேவி ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இருமகன்களுடன் காக்கை வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
மேலும் இவ்வாலயத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளதாகவும், அதேப் போல் ராமபிராமன் இவ்வாலயத்தில் வழிபாடு செய்துள்ளதாகவும் இத்தல வரலாற்றில் கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு சிறப்புகளோடு திகழும் இவ்வாலயத்திற்கான மகா கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது
அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், சிவாச்சாரிகள் புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, பிறகு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.