காஞ்சிபுரம், ஏப். 25 –
சென்னை அடுத்த குன்றத்தூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த குன்றத்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டிருக்கும் தமிழ் கடவுளான முருகப் பெருமான் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருக்கோவில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை முடிவெடுத்த நிலையில் 2 கோடி மதிப்பில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. அதனை முன்னிட்டு, கோவில் கோபுரங்கள், கலசங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன. 20ம் தேதி யாக சாலைகள், அலங்காரம் செய்யப்பட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராஜகோபுரத்தின் மீதும் , மூலவர் கோபுரம் உள்ளிட்ட பிற கோபுரங்களிலும், கலசங்களிலும் புனித நீர் தெளிக்கப்பட்டது . இந்த விழாவில் 30,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு புனித நீரை பருந்து வசதியுடன் தெளித்தனர். குன்றத்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பரவசத்துடன் கண்டு களித்தனர். இவ்விழாவில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

























