கும்பகோணம், பிப். 02 –
கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததின் காரணமாக, கும்பகோணம் மாநகராட்சியின் ஏ ஆர் ஆர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை ஒடிந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவியர்களின் முப்பதிற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திவுள்ளது. அதுக்குறித்து தகவலறிந்து சேதம் குறித்து ஆய்வு நடத்திட மாநகராட்சி துணை மேயர் அப்பள்ளிக்கு வருகை தந்தார்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர் ,தேனி மற்றும் தஞ்சை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழை காரணமாக மயிலாடுதுறை நாகை திருவாரூர் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை, இந்நிலையில் துவரங்குறிச்சி அருகே உள்ள மாநகராட்சி ஏ ஆர் ஆர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார் பகுதியிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் அப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான மரத்தின் கீழ் தங்கள் சைக்கிளை நிறுத்திவிட்டு வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது எழுப்பிய திடீர் சத்தத்தின் ஓசைக் கேட்டு வந்து வெளியே வந்து பார்த்தபோது தொடர்ந்து பெய்த மழையினால் பழமையான பெரிய மரத்தின் மரக்கிளை ஒடிந்து அங்கு நிறுத்தி வைத்திருந்த முப்பதிற்கும் மேற்பட்ட சைக்கிள் மீது விழுந்து பெருத்த சேத த்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அப்பள்ளிக்கு விரைந்து வந்த மாநகராட்சி துணை மேயர் சு.ப தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மாமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சைக்கிள் மீது விழுந்த மரக்கிளையை பார்வையிட்டு தொடர்ந்து பள்ளியில் ஏதாவது சேதம் உள்ளதா என்று ஆய்வும் மேற்கொண்டனர்.
தொடர்ந்து மரக்கிளையை அப்புறப்படுத்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது.