கும்பகோணம், ஏப். 20 –
பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அடுத்துள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (70). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளது. ரமேஷ் தற்போது பசுபதிகோயிலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் பிச்சை பிள்ளை தனது செங்கல் சூளைக்கு, தனது வீட்டின் பின்புறமுள்ள நிலத்தில் மண்ணை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று மாலை ரமேஷ், பிச்சைபிள்ளையிடம் அதிகமாக பள்ளம் ஏற்படும் என கூறியுள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ரமேஷ் அரிவாளால் பிச்சைபிள்ளை வலது கையில் வெட்டிவுள்ளார் இதில் பலத்த காயமடைந்த பிச்சைபிள்ளையை அருகிலுள்ளவர்கள், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிச்சை பிள்ளை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.