செங்கல்பட்டு, டிச. 10 –
சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய நெடுஞ்சாலையாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தமிழகத்தின் வணிக போக்குவரத்திற்கும் பெரும் பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் தொடர் மழையின் காரணமாக சாலை சேதமடைந்து பள்ளங்கள் உருவாகியுள்ளது. மேலும் கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பள்ளங்களில் சிமெண்ட் கலவையை கொட்டி சாலை சீர்செய்தனர். ஆனால் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்காத சிமெண்ட் கலவையால் மேலும் பள்ளங்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே திருச்சி நோக்கி செல்லக்கூடிய பாதையில் வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பாலாற்று மேம்பாலம் அருகே வந்த போது வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாலாற்று மேம்பாலம் முதல் இருங்குன்றம் பள்ளி மற்றும் பழவேலி ஆகிய 3-கிலோ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.