திருவாரூர், ஜன. 30 –
சொக்கநாத பெருமானுடன் பாதயாத்திரையாக திருவாரூர் வந்த தருமை ஆதீனத்திற்கு, திருவாரூர் மாவட்ட எல்லையில் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
சைவ சமய ஆதீனங்களில் முக்கியமான ஆதீனமாக விளங்கும் தருமை ஆதீனம், கடந்த 23- ஆம் தேதி சொக்கநாத பெருமானுடன் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரத்தில் இருந்து பக்தி பாத யாத்திரை பயணத்தை தொடங்கி்னார்.
தொடர்ந்து நடைப்பயணத்தை மேற்கொண்ட அவர் நன்னிலம் அருகே உள்ள பேரளத்திற்கு கடந்த 27-ஆம் தேதி வந்தடைந்தார் மேலும், அங்குள்ள ஆதினத்திற்கு உட்பட்ட சிவன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வொன்றில் பங்கேற்றார்.
மீண்டும் 28- ஆம் தேதி் பேரளத்தில் இருந்து பாதயாத்திரையே துவக்கி நேற்று மாலை 6.30 மணியளவில் திருவாரூக்கு தருமை ஆதீனம் வந்தடைந்தார்.
இந்நிலையில் சொக்கநாதபெருமானுடன் பாதயாத்திரையாக வந்த தருமை ஆதினத்திக்கு திருவாரூர் எல்லையான நாலுகால் மண்டபத்தில், திருவாரூர் ராஜாங்க கட்டளை தம்பிரான் தலைமையில் பூர்ணகும்ப மரியாதையுடன் அவருக்கு, ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பளித்தனர்.
மேலும் அவருக்கு ஒட்டகம், குதிரைகள் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நகரின் முக்கிய வீதிகளான ரத வீதிகள் வழியாக அழைத்து வரப்பட்ட தருமை ஆதீனம், தெற்கு வீதியில் உள்ள ராஜாங்க கட்டளை மடத்திற்கு வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, அம்மடத்தில் சொக்கநாதபெருமானை தருமை ஆதீனம் எழுந்தருள செய்து, அங்கு சொக்கநாதபெருமானுக்கும், ஆதீனகுரு முதல்வர் கமலை ஞானபிரகாச சுவாமிக்கும் தீபாரதனை காட்டி வழிப்பாடுகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து, ராஜாங்க கட்டளை மடத்தில் தங்கி வருகின்ற பிப்ரவரி 1- ஆம்-தேதி் ஆதீன குருமுதல்வர் கமலை ஞானபிரகாசர் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்.
மேலும் இந்நிகழ்வினைத் தொடர்ந்து, தருமை ஆதீனத்திற்குட்பட்ட கிடாரங்கொண்டானில் உள்ள அருள்மிகு சுந்தரபார்வதி உடனாகிய கைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் அவர் கலந்துக்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து, எதிர் வரும் பிப் 4 ஆம் தேதி அங்கிருந்து திருக்குவளைக்கு தமது பாத யாத்திரையை தருமை ஆதீனம் மேற்கொள்கிறார்.