செங்கல்பட்டு, ஏப். 03 –
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே செயின்ட் ஜோசப், செயின்ட் மேரீஸ், தூய கொளம்பா மற்றும் எஸ்டிஏ உள்ளிட்ட பள்ளிகளும், மேலும் புனித சூசையப்பர் உட்பட பிரபல இரண்டு தேவாலயங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம், தனியார் மருத்துவமனை, திரையரங்கம், மாவட்ட சிறைச்சாலை உள்ளிட்வைகள் இப்பகுதியில் அமைந்துள்ளது.
மேலும், இந்நகரின் முக்கியச்சாலையாக விளங்கும், இவ்வழியாக காஞ்சிபுரம், வேலூர் பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து சென்று வருகின்றன.
மேலும், இச்சாலையின் இருபுறமும் நிறைய கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும் இப்பகுதியில் பார்கிங்க் இல்லாமலே கார் ஆட்டோ போன்ற நான்கு, மூன்று மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
மேலும் இப்குதியில் அமைந்துள்ள சிக்னல் என்பது வெறுமனை விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுகிறது. அது ஒருபோதும் போக்குவரத்தை கட்டுப்படுத்த பயன்படவில்லை, இதனால் அம்முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் முதியவர்கள் மகளிர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அச்சாலையை கடக்கவோ நடந்து செல்லவோ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வெகு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது இரண்டு மூன்று மாதங்களாக இந்த சாலையில் கால்வாய் அமைத்து அதன் மேல் சாலை அமைக்கப்படுகிறது. அந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து மக்கள் நடமாட்டம் மிகுந்த வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடிய மிக முக்கியமான இந்த சாலையில் போதுமான சாலை பாதுகாப்பு வசதி கிடையாது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி துவங்கும் போதும் முடிவடையும் போதும் மூன்று பள்ளிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் சைக்கிளிலும் பெற்றோருடன் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் செல்லும் போது தினசரி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தையை அவரது பெற்றோர் பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திம்மாவரம் நோக்கி செல்வதற்காக பள்ளியை கடக்கும் போது திம்மாவரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதும் காட்சி தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் தாயுக்கும் மகளுக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு கால்முறிந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், செங்கல்பட்டு நகரத்தை பொறுத்தவரை ஷேர் ஆட்டோக்கள் அதிகரித்துள்ளது. அவர்கள் சாலைவிதிகளை கடைபிடிப்பதில்லை. விபத்துக்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த மிக முக்கிய சாலையில் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. பள்ளி நேரங்களில் போக்குவரத்தை சீர் செய்வதற்கு போலீஸ் காவலர்கள் கிடையாது.
ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்துவது கிடையாது. ஏற்கனவே போடப்பட்டிருந்த வேகத்தடையையும் அகற்றியாச்சு… இவற்றையெல்லாம் தடுக்க நடவடிக்கை எதுவும் எடுத்தபாடில்லை என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.




















