காஞ்சிபுரம், ஜூலை. 29 –
காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் என்பவரின் மகன் ஒன்பது வயது நேதாஜி ஆவார். இவர், கலியனூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்றிரவு நேதாஜி, அவரது பாட்டி மற்றும் உறவினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, முதல் மாடி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒன்பது வயது சிறுவன் நேதாஜி அவரது பாட்டி அஞ்சலை மற்றும் அவருடைய உறவினர் மாளவிகா ஆகியோர் இவ்விபத்தில் சிக்கி கொண்டனர்.
தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் மூவரையும் சிகிச்சைகாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் நேதாஜி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகிறது எனக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் சிறுவன் உயிரிழந்தது அய்யம்பேட்டை பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.