சென்னை, ஏப். 09 –

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கும் கருத்து இந்திப் பேசாத மற்ற மாநிலங்களில் அதிர்வலைகளை எழுப்பி வரும் நிலையில் அதிலும் குறிப்பாக தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழ்நாட்டில் அவரின் கருத்துக்கான எதிர்வினை கருத்துக்களை பாஜக உள்ளிட்ட சில கட்சிகளை தவிர்த்து பெரும்பான்மையான அரசியல் ,சமூக ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் என்றாவறு அனைத்து தரப்பு தலைவர்களும் ஒட்டுமொத்தமாக தங்களது கண்டன குரல்களை அறிக்கையின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டன அறிக்கையை சமூக வலைதளம் மூலம் வெளிட்டுள்ளார்.

அதில் அவர் இந்திப்பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சிப்பதின் வாயிலாக அதன் ஆரியமுகத்தைக்காட்டி உயிரிழந்த சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்டப்பார்க்கிறது என்ற வாறு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் பின் வருமாறு அறிக்கையில் தெரிவிப்பதாவது ;

இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா?  என்றவாறு தனது கண்டனத்தை தொடங்கியுள்ள சீமான், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது முதல், பல்வேறு வடிவங்களில் இந்தியை மெல்ல மெல்லத் திணித்திட முயல்வதும், இறந்த சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட வேலைசெய்வதுமான பாஜக அரசின் போக்குகள், மண்ணின் மக்களுக்கெதிரான ஆரியமுகத்தையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களையும், அதன் தனித்துவ அடையாளங்களையும் முற்றாகச் சிதைத்தழித்து ‘இந்து’,’இந்தி’,’இந்தியா’ என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும்.

பாஜக அரசின் இந்தித்திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர்புரிவோமெனப் பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன் என்றவாறு தமது அறிக்கையில் அவரின் அழுத்தமான கருத்தினை பதிவுசெய்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here