கும்பகோணம், ஜூன், 01 –
கும்பகோணம் அருகேவுள்ளது, கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் ஸ்தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இவ்வாலயத்தில் பல்வேறு விநோதமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும்.
இந்நிலையில் இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினமன்று திருத்தேரோட்டம் கடந்த 1943 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் அவ்வாலயத்தின் திருத்தேர் வலம் வரும் பெரும்பாலான பகுதிகள் மிகவும் சிதிலமடைந்தும், மேலும் அத்திருத்தேரின் சக்கரங்கள் பழுதடைந்து தேரோட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறை அனுமதியுடன், புதிய திருத்தேர் சுமார் 24 டன் எடையில், 16 அடி உயரமும், 14 அடி அகலம் மற்றும் 16 அடி நீளத்தில் 37 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இத்திருத்தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.