தலைக்காடு, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அருள்மிகு திரு முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகளிலும் வலம் வந்தார். அக்காட்சியினைக் காண திரளான பக்தர்கள் மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அக் கிராமத்தில் உள்ள பக்தர்கள் முளை கட்டிய பயறு வகைகளை சுமந்து ஆட்டம் பாட்டத்துடன் நடந்தவாரே ரிசப வாகனத்துடன் வந்தனர்.
இவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோரா என்ற கோஷம் இட்டனர். அக் கோசங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உரத்த ஒலியெழுப்பியது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வந்த ஸ்ரீ முருகப்பெருமானை சுமந்து வந்த ரதத்தை இழுத்து வந்து ஆற்றங்கரையில் இறங்கி புனித நீர் வாரி இறைக்கப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இச்சிறப்பு மிக்க விழா ஏற்பாடுகள் அனைத்தையும் அத்திருக்கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட விழாக் கமிட்டியினர் வெகுச்சிறப்பாக செய்திருந்தனர்.