கும்பகோணம், மே. 09 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஏராகரம் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் ஸ்ரீ திரிபுரசுந்தரி மகா காளியம்மன் ஆலயம் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. மேலும் இவ் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் இச் சித்திரை மாதத் திருவிழாவினை முன்னிட்டு மகாகாளியம்மன் திருநடனம் இன்று 9ம் தேதி செவ்வாய்கிழமை முதல் 11ம் தேதி வியாழக்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
மேலும் இதனை முன்னிட்டு ஸ்ரீ திரிபுர சுந்தரி மகாகாளியம்மன் திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றி வைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், எலுமிச்சம் பழம், மங்கல பொருட்களான வளையல் தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் ஸ்ரீ திரிபுரா சுந்தரி மகா காளியம்மனை தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அதன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர். அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, மதுரகாளி தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதங்களை வழங்கியது.

























