கும்பகோணம், செப். 23 –
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி (40) என்ற கொள்ளையன் இன்று கும்பகோணம் உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையால் இன்று கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி (40) என்பவர் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் சரகங்களை சேர்ந்த இடங்களில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதையும், கோயில்களில் சுவாமி கழுத்தில் கிடக்கும் நகைகள் மற்றும் மாங்கல்யம் ஆகியவற்றை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வருகிறது.
இந்நிலையில், நாச்சியார் கோவில் குற்றப்பிரிவு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில், தலைமை காவலர் கவியரசன், முதுநிலை காவலர் ரமணி மற்றும் காவலர்கள் விக்னேஷ் மற்றும் தினேஷ் ஆகிய ஐந்து பேர் கொண்ட தனிப்படையினர் கண்மணியை சுற்றி வளைத்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலி, மாங்கல்யம், மோதிரங்கள் உள்ளிட் நகைகளும், ரூபாய் 18 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்