திருச்சேறை, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருச்சேறை அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் சேவை சாதிக்கிறார்.
காவிரி நதி, மூவாயிரம் தேவ வருடங்கள் தவம் செய்து திரேதா யுக, தை மாத பூச நட்சத்திர தினத்தன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும் பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போன்று பஞ்சலட்சுமிகளுடன் காட்சியளித்து தென்னகத்தில் கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும் பிராப்தமும், இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்க வேண்டும் என மூன்று வரங்கள் பெற்றதாக வரலாறு எனவே 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் சூரியபிரபை, ஷேச வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் நாளான இன்று பஞ்ச லட்சுமிகளுடன் திருத்தேரில் எழந்தருள திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரநாதா சாரநாதா என்று முழக்கமிட்டபடி திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.